Cassatta கண்மணியே…

இருவருமே அழகில்லை என்பதை அறிந்திருந்தோம்..

ஆனால் என் திமிரும் உன் அன்பும் ஏற்கனவே காதலிக்க தொடங்கியிருந்தது…

என் மனதின் சோகத்தை என் முகத்தில் அறிவாய்….
உன் அடிவயிற்றின் வலியை உன் கண்களில் அறிவேன்….

எனக்கு அறவே பிடிக்காத உன் வியர்வை வாசம் ஒரு நாள் என் வாசனைத் திரவியமாய் மாறியது…

அந்த பெரிய தூணின் மறைவில் அருகருகே அமர்ந்து முழுமூச்சு உள்ளிழுத்து வெளிவிடும் பெருமூச்சு எனக்குத் தெரிந்த தியானம் என்பேன்…

உன்னை நினைத்து என் மொபைல் போன் கையில் எடுக்கும்பொழுது உன்னிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி குட்டி போடும்…

‘இங்கே எங்காவது இருக்கிறாயா?’ என்ற அந்த தகவலுக்கு உன் முன்னே தோன்றி ‘ஆம்’என சொல்லி ஆச்சர்யம் செய்வேன்…

அது நட்பா, காதலா, அதற்கும் மேலேயா என்பதற்கு விடையே கிடைத்ததில்லை..
அதனை நாம் பெரிதுபடுத்தியதும் இல்லை..

ஆனால் கைகோர்த்து, கண்களில் புதைந்து, பிரிய மனமின்றி, அழுகையை அடக்கிக்கொண்டு, கண்ணீரை விழுங்கிக்கொண்டு நின்றபோது அன்று நம் செவிகளில் ஒலித்த ஒரு பாடல் மட்டும் நினைவில் ஆணி அடித்து நிற்கிறது….

‘பவித்ரா’ படத்திலிருந்து ‘அழகு நிலவே’… ‘உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்கு புரியாதே’….
ஏன் நமக்கேதான் புரியவில்லை…

நாம் கூடவே இருப்பது போல் உணர கைக்குட்டை மாற்றிக்கொண்ட நாட்கள்…

தொலைதூரம் பிரிந்து சென்று, திரும்பிப்பார்த்து, மீண்டும் கால்கடுக்க என்னை நோக்கி நடந்து வருவாய்….

‘போகட்டா’ என்பாய்….

மூன்று பதில் சொல்வேன் நான்…
வாய் ‘போயிட்டு வா’ என்றும்,
கண்கள் ‘போகாதே’ என்றும்,
மனம் ‘எப்பயும் என்னை விட்டு போய்விடாதே’ என்றும்…..

காலம், பிரிந்துவிடுங்கள் என்று கட்டளை இட்ட நாளில்….
‘உன் நினைவாய் ஏதாவது தந்துவிட்டுப் போ’ என்றேன்…
நினைவுகளை ‘நினைவுகளாய்’ விட்டுச் சென்றாய்.
…..கண்களால் சாட்டையடிக்கும்
Cassata கண்மணியே…..

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *