யார் அந்த கண்ணம்மா ?

‘கூட்டமான பேருந்தில் ஓட்டுநர் அருகில் நின்று பயணச்சீட்டு வாங்குவதற்கு சில்லறையை நடத்துநருக்கு அனுப்பிவிட்டு டிக்கெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும்போது கட்டுமரம் போல கை மாறி மாறி தவழ்ந்து வந்து கொண்டிருக்கும் டிக்கெட் ஒரு அழகான ‘பெண்ணின்’ -கையை கடக்கும்போது நாம் திடீரெனெ அந்த பெண்ணின் முகத்தை காண முயற்சிப்போம். ஒருவேளை அவள் பார்வை நம்மை தீண்டிவிட்டால் ஒரு நிமிடம் உடலெல்லாம் ஏதோ செய்யும். அப்படி செய்தால் ? ‘

– அவள்தான் கண்ணம்மா.

‘இரவு 2 மணிக்கு தூக்கம் வராத இரவில் எழுந்து நடந்து வீட்டின் பால்கனி-க்கு வந்தால், எதிர்வீட்டு பால்கனியில் செல்போன் ஒளியால் முகத்தில் மேக்கப் அணிவித்த பெண்ணொருத்தி நின்றிருப்பாள்.’

– அவள்தான் கண்ணம்மா.

‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் 10 பேர் கூட்டமாக சேர்ந்து மிகப்பெரிய வாகனத்தைக் கூட சடாரென நிறுத்தி கடந்து செல்வர். அதில் 100 டிகிரி வெயிலில்கூட ஒரு பார்வையால் நம் மனதை ஜில்லென வருடிச் செல்வாள் ஒருத்தி’

– அவள்தான் கண்ணம்மா.

‘சிறுவயதில் பென்சிலுக்கும் ரப்பருக்கும் சண்டை போட்ட பெண்தோழி ஒருத்தி திடீரென ஒரு குறுஞ்செய்தி மூலம் மீண்டும் நம் வாழ்வில் இணைந்து ஒவ்வொரு நொடியையும் அழகாக்கிடுவாள்’

– அவள்தான் கண்ணம்மா.

‘அலுவலகத்திலோ, பக்கத்து வீட்டிலோ, கல்லூரியிலோ ஒரு பெண்ணை நாம் தினந்தோறும் கடந்து வரவேண்டியிருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த உறவு திருமணத்தில் முடியாது என மனம் ஆணித்தனமாக நம்பும். ஆனாலும் அவள்மேல் இருக்கும் பாசமோ, அக்கறையோ, அன்போ கொஞ்சமும் குறையாமல் இருக்கும்’

– அவள்தான் கண்ணம்மா.

‘கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது நம் முன்னால் ஒரு பெண்ணொருத்தி நடந்து செல்வாள். தலை குளித்த தன் கூந்தலின் வாசம் அவள் வைத்திருக்கும் மல்லிப்பூவின் மேல் படந்திருக்க, அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் காற்று திருடி வந்து நம்மிடம் சேர்க்கும். அவளை ரசித்தபடியே கோவிலை சுற்றி வர இறுதி வரை அவள் முகத்தை காணாமலேயே போய்விடும். ஆனால் அவள் பின்னழகு மட்டும் நம் மனதுடன் பிண்ணிக்கொள்ளும்’

– அவள்தான் கண்ணம்மா.

‘ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான பகுதி காதல். காதல் என்னும் புனித கடலின் கடல்கன்னியே, காதலி.’

– அவள்தான் கண்ணம்மா.

‘எங்கோ பிறந்து காதலில் இணைந்து திருமணம் என்னும் அற்புதமான நிகழ்வில் வாழ்க்கைத் துணையாகி ஒரு கடவுள் போல நம்மை வாழ்க்கை முழுதும் பாதுகாக்கும் மனைவி’

– அவள்தான் கண்ணம்மா.

இப்படியான கண்ணம்மாக்களின் தொகுப்பே கண்ணம்மா.இந்த தொகுப்பு ஆண்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் இணைக்கும் என்று நம்புகிறேன்.

காத்திருங்கள் அவரவரின் கண்ணம்மாவுக்காக.